நாமக்கல் மாவட்டத்திற்கு 7,682 டன் இலவச அரிசி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்ட பொதுமக்களுக்கு தலா 5 கிலோ இலவசமாக வழங்குவதற்காக, மொத்தம் 7,682 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் உத்தரவுப்படி, கூடுதல் உணவு தேவைக்காக அந்தியோதயா அன்னயோஜனா ரேசன் கார்டுதாரர்களுக்கு 643.640 டன் விலையில்லா அரிசியும், முன்னுரிமை ரேசன்கார்டுதாரர்களுக்கு 3,163.215 டன் விலையில்லா அரிசியும், முன்னுரிமையற்ற ரேசன்கார்டுதாரர்களுக்கு 3,876.030 டன் விலையில்லா அரிசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், மொத்தம் 7,682.8885 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ரேசன் கார்டுகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், ஒருவருக்கு 5 கிலோ வீதம் (மே மற்றும் ஜுன் 2021) இரண்டு மாத காலத்திற்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே மாதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி ஜுலை மாதத்தில் வழங்கப்படும்.
ஜுன் மாதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி, கடந்த 5ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களும் தங்களுக்குரிய கூடுதல் அரிசியினை ரேசன் கடைகளில் தவறாமல் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். ஒருரேசன் கார்டுக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க செல்ல வேண்டும்.
இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண்.04286-281116 மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.