மோகனூர் சர்க்கரை ஆலைக்கு மாநில அளவில் சிறந்த செயல் திறனுக்கான 3 ஆம் பரிசு

தமிழகம், புதுச்சேரி மாநில அளவில், நடப்பு கரும்பு அரவை பருவத்தில் சிறந்த செயல்திறனுக்கான, 3ஆம் பரிசு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-15 01:15 GMT

பைல் படம்

இந்தியன் வேளாண் ஆராய்ச்சி கழகம், கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான, 52வது கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும், கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், 2020–21ம் ஆண்டு, கரும்பு அரவை பருவத்தில், செயல்பாடுகளின் அடிப்படையில், ஒட்டு மொத்த சிறந்த செயல்திறனுக்கான, 3ம் பரிசை, மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்றது.

அதற்கான விருது, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் மல்லிகாவிடம் வழங்கினர்.

இவ்விழாவில், குறைந்த பரப்பில் அதிக மகசூல் எடுத்த, பாலப்பட்டி கோட்டம் கரசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி முதல் பரிசும், மோகனூர் மேற்கு கோட்டம், முத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபிநாத்துக்கு 2ம் பரிசும், வேளாண் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. வரும் அரவைப் பருவத்தில், ஆலை அதிக அளவில் கரும்பு அரவை செய்து, தமிழகம், புதுச்சேரி மாநில அளவில் சிறந்த செயல்திறனுக்கான முதல் பரிசை பெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆலையின் மேலாண் இயக்குனர் மல்லிகா கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News