தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி

தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த, அரசுப் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு, ரூ. 15 லட்சம் கருணைத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-04-26 01:15 GMT

தேர்தல் பணியின்போது உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியர் ஜெயபாலனின் குடும்பத்திற்கு, ரூ. 15 லட்சம் கருணைத்தொகைக்கான காசோலையை, மாவட்ட ஆட்சியர் உமா நேரில் சென்று வழங்கினார்.

தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த, அரசுப் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு, ரூ. 15 லட்சம் கருணைத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டிய வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம், கடந்த 7ம் தேதி சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி வேதலோக வித்யாலயா மெட்ரிக் நடைபெற்றது. இந்த பயிற்சியில், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயபாலன் (53) கலந்து கொண்டார். அவர் பயிற்சி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். அவர், வேட்டாம்பாடி அருகே அண்ணா நகர் பிரிவு ரோட்டில் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தேர்தல் பணியின்போது, சாலை விபத்தில் இறந்த ஆசிரியர் ஜெயபாலனின்,குடும்பத்தினருக்கு கருணைத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிட தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் ராசிபுரம் வட்டம், ராசிபுரம் நகராட்சி, வேலவன் நகர், காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வரும், உயிரிழந்த ஆசிரியரின் மனைவி மகேஸ்வரி, மகள் தாரணா, மகன் ஹிதேஷ்பாலாஜி, தந்தை மாதையன், தாய் உண்ணாமலை ஆகிய 5 பேரிடம், தேர்தல் ஆணையம் அறிவித்த கருணைத் தொகை ரூ. 15 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் உமா நேரில் சென்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News