இளம் பெண் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

இளம் பெண் கொலை வழக்கில் குற்றவாளி ராஜூவிற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Update: 2021-12-28 09:16 GMT

குற்றவாளி ராஜு .

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மருதூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயியான இவருக்கு நந்தினி என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். நந்தினி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த காக்காதோப்பு கிராமத்தில் தனது சித்தப்பா ராஜூவின் வீட்டில் தங்கி அருகில் உள்ள நூல் நூற்பு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே பகுதியில் வெள்ளமரத்துப் பட்டி கிரமத்தை சேர்ந்த சித்தப்பாவின் உறவினர் ரமேஷ் என்பவரை காதலித்துள்ளார். இதற்கு சித்தப்பா ராஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனது அப்பா வீட்டிற்கு நந்தினி வந்துள்ளார். அவர்களிடம் காதல் குறித்து எடுத்துக் கூறி சம்மந்தம் வாங்கியுள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊர் திருவிழாவிற்காக சித்தப்பா ராஜு, தனது மனைவி சரசுடன் சுப்ரமணியபுரத்திற்கு வந்துள்ளார். அங்கு உறவினர் ரமேஷ் பெண் பார்க்க வருவதை அறிந்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காலை 6 மணியளவில் நந்தினியை அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்ற சித்தப்பா ராஜூ, நந்தினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேனை எடுத்து நந்தினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது இருவருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. இருவரையும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேல் சிகிச்சைக்காக நந்தினி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தனர். இன்று இதனை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, குற்றவாளி ராஜூவிற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து ராஜூவை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News