கரூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்: பார்வையாளர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரி நேரில் ஆய்வு.

Update: 2021-11-13 13:00 GMT

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை,  ஆய்வு செய்யும் பார்வையாளர் மகேஷ்வரி.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்துள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளி மற்றும் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாமினை தமிழ்நாடு சிறு, குறு நடுத்தர தொழில் சிறப்பு செயலாளரும் கரூர் மாவட்டதேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான மகேஸ்வரி,  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் உள்ளிட்டவைக்கும் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவி புரிந்தனர். விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.

இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் கரூர் மாவட்டத்தில் 619 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 1,045 வாக்குச்சாவடி மையங்களில் இன்றும், நாளையும் மற்றும் அடுத்த மாதம் (டிசம்பர்) 27, 28-ந் தேதிகளிலும் நடக்கிறது.

Tags:    

Similar News