சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2021-11-12 15:30 GMT

பாலியல் துன்புறுத்தல் வழக்கில்  25 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட கணபதி.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கணபதி ( 61 ). இவர் தனது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 14 , 15 , 17 வயதுடைய சகோதரிகளான 3 சிறுமிகள் கரூரில் டெக்ஸில் வேலை பார்க்கும் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்குச் சிறுமிகள் 3 பேரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.

 இந்நிலையில், சிறுமிகள் 3 பேரையும் கணபதி தனித்தனியே வரச்சொல்லி தீர்த்தம்,பொங்கல் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அப்போது அச்சிறுமிகளுக்குத் தனித்தனியே பலமுறை பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 3 சிறுமிகளும் தாயிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமிகளின் தாய் வெங்கமேடு காவல் நிலையத்தில் கடந்த 2019 - ம் ஆண்டு புகார் அளித்தார்.

இதையடுத்து குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ( போக்சோ ) சட்டம், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டப்பிரிவுகளின்  கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு, குற்றவாளி கணபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News