கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: 40 நாள்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
கரூர் மாவட்டத்தில் இன்று 210 பள்ளிகள் திறக்கப்பட்டு, 52 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று திறக்கப்பட்ட பள்ளிகளில் 40 நாள்களுக்கு அந்தந்த வகுப்புகளுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதன்பிறகே பாடங்கள் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில். 18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறவுள்ளது.
மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், மாணவர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும், பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாதபட்சத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தலாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இன்று 210 பள்ளிகள் திறக்கப்பட்டு, 52 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பிறகே அனுமதித்தனர். வகுப்பு அறையில் உரிய சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு முதல் 40 நாள்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகே பாடங்கள் நடத்தப்பட உள்ளது.