முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது
HIGHLIGHTS
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியே வந்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த மாதம் 31ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அப்போது நேரில் ஆஜரான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது கூறினார்.
மறு பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 10 ம் தேதி சம்மன் அனுப்பினர். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று காலை நேரில் ஆஜரானார்.
கே.டி.இராஜேந்திரபாலாஜியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும் அவரிடம் மோசடி வழக்கு தொடர்பான 100 கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார். மேலும் மோசடி வழக்கின் ஆவணங்கள் குறித்தும் ஆதாரங்கள் குறித்தும் எஸ்பி மனோகர், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.