திருவண்ணாமலை நகராட்சியில் மறுவாக்குபதிவு அமைதியான முறையில் துவங்கியது
திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டுக்கான மறுவாக்குபதிவு அமைதியான முறையில் துவங்கியது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 57 ல் வாக்குப்பதிவு நாளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
இன்று காலை முதலே அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் கூடியுள்ளனர்.
ஏராளமான போலீசார் துணை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடி அமைந்துள்ள சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கம் சாலை பகுதியில் வரும் வாகனங்கள் அனைத்தும் வேறு வழியாக திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் என அப்பகுதி முழுவதும் குவிந்துள்ளதால் ஒரு திருவிழாவைப் போல காட்சி அளிக்கிறது.
போலீசார் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் தடுப்புகளை அமைத்து வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்பே அப்பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.
அதேபோல் வேட்பாளர் மற்றும் அவர்களின் முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடியை சுற்றி அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதற்றமான சூழ்நிலையில் தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தை கலைக்கும் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.