நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது.
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடிப்பட்டம் பல்லக்கில் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
பின்னர் திருகொடிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் மேல வாத்தியங்கள் இசைக்க சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ச்சியாக கொடிமரத்துக்கு 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும், சுவாடேச மஹா தீபாரதனையும் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் திரளாக பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 4ஆம் திருநாளன்று சுவாமி நெல்லையப்பர் சுயம்புவாக உருவான வரலாறுத் திருவிளையாடல் நிகழ்வும் 10 ம் திருநாள் அன்று ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெற உள்ளது.