பறை,மேளம் அடித்து கோரிக்கை மனு அளித்த இசை கலைஞர்கள்
கோவில் திருவிழாக்களில் 50 சதவீத கட்டுப்பாடுகளுடன் நடக்க அனுமதி வழங்கும்படி திருநெல்வேலி கலெக்டரிடம் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மனு அளித்தனர்.
கொரோனா 2 வது அலை காரணமாக தற்போது மீண்டும் கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே 50% கட்டுப்பாடுகளுடன் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டரிடம் தென்மண்டல அனைத்து கலை சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். முன்னதாக அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடத்தியபடி மனு அளிக்க வந்தனர். குறிப்பாக கிராமப்புற கோவில்களில் கனியான் கூத்து நடத்தும் கலைஞர்கள் பறை அடித்த படியும் மேளக்காரர்கள் மேளம் அடித்து நடனமாடியும் மனு அளித்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம் அருகில் கிராமிய இசை சத்தம் விண்ணை எட்டியது. இதுகுறித்து சங்க நிர்வாகி ராஜா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். தற்போது மீண்டும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே அரசு 50% கட்டுப்பாடுகளுடன் கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.