கொரோனா விதிமீறல்: ஒண்டிவீரன் நினைவு நாளில் 1103 பேர் மீது போலீசார் வழக்கு
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 1103 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.
HIGHLIGHTS
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளில் கொரோனா விதிகளை மீறியதாக பாஜக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்பினர் என ஆயிரத்து 103 பேர் மீது திருநெல்வேலி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 250வது நினைவு தினம் பாளையங்கோட்டை ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மதிவேந்தன், திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு மற்றும் எம்பி, எம்எல்ஏ,க்கள் மாலை அணிவித்தனர்.
அதுபோல் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ வி.பி.துரைச்சாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
கொரோனா விதிமுறைகளை மீறி பெரும் கூட்டமாக கூடியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 61 பேர், அதிமுக, மதிமுக, காங்கிரஸ், தமிழ்புலிகள் என அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் என ஆயிரத்து 103 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.