மாஞ்சோலை தொழிலாளர்கள் பலியான நாள் தாமிரபரணி ஆற்றில் சர்வ கட்சியினர் அஞ்சலி
நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் 22 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 20 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
HIGHLIGHTS
நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் 22 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 20 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
கடந்த 99 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்ற போது கலவரம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
ஆண்டுதோறும் ஜூலை 23 ஆம்தேதி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 22 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ஜ., மா.கம்யூ., இந்திய கம்யூ., இந்திய குடியரசுக்கட்சி, த.ம.மு.க., எஸ்.சி.எஸ்.டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு உட்பட 20 அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு கட்சி, அமைப்பினருக்கு அஞ்சலி செலுத்த தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் ஆற்றில் அஞ்சலி செலுத்துகின்றனர். புதிய தமிழகம் கட்சியினர் பேரணியாக வந்து பின்னர் நிர்வாகிகள் ஆற்றில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதனையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் உத்தரவுப்படி நெல்லை ஆற்றங்கரை, ஜங்ஷன் பஸ்ஸ்டாண்ட் பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சி நிர்வாகிகள் திரளும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆற்றில் நினைவுச் சின்னங்கள் வைக்கக்கூடாது, கோஷங்கள் எழுப்பக்கூடாது, ஒதுக்கப்பட்ட நேரத்தில் வரவேண்டும், தடி, ஆயுதங்கள் கொண்டுவரக்கூடாது, வாகனப்போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அஞ்சலி செலுத்த வரும் கட்சி, அமைப்பினருக்கு போலீசார் விதித்துள்ளனர்.