அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் -ஆணையர் எச்சரிக்கை
திருநெல்வேலி மாநகராட்சியில் அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும் -ஆணையர் எச்சரிக்கை
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சியில் அனுமதியும் பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்பபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல்நடவடிக்கை தொடரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையில்... திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான சாலைகளில் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், விளம்பர பலகைகள் (advertisement Board ) பொருத்துவதற்கான உரிய அனுமதி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டு வருகின்றது.
எனவே, மேற்படி சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளுக்கு உரிய அனுமதியினை பெற்ற சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அதற்கான அனுமதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பெற்றிருப்பின் அதற்கான உத்தரவு நகலினை உரிய ஆவணங்களுடன் ஒரு வார காலத்திற்குள் (06.08.2021) மாநகராட்சி மைய அலுவலக திட்டப்பிரிவில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எவ்விதமான அனுமதியும் பெறப்படாமல் தன்னிச்சையாக சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாக அப்புறப்படுத்தப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் பொருட்கள் எக்காரணத்தினை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.
எனவே, உரிய அனுமதி பெற்று விளம்பர பலகைகள் பொருத்தப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஃ உரிமையாளர்கள் காலதாமதமின்றி உடனடியாக அனுமதி பெற்ற ஆவண நகலினை மாநகராட்சியில் ஒப்படைக்கும் படி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் என தெரிவித்துள்ளார்.