நெல்லை அருகே நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது
நெல்லை அருகே நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் தாழையுத்து அடுத்துள்ள நாஞ்சான் குளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கும் நிலத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. .
ஜேசுராஜ் தனது நிலத்தில் குடிநீர் தேவைக்காக இன்று போர் போட்டுக்கொண்டிருந்தார். அவருடன் அவரது தங்கை வசந்தா மற்றும் தம்பி மரியாஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள் இந்த ஐந்து பேரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5 பேருமே படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே ஜேசுராஜ், ஜேசு ராஜின் தம்பி மரியாஜ், சகோதரி வசந்தா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். இதில் வசந்தா என்பவர் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் மரிய ராஜ் மகன் ஆமோஸ் மற்றொரு ஜேசுராஜ் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். படுகாயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை அருகே நிலப் பிரச்சினை தொடர்பாக அண்ணன், தம்பி, தங்கை ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக 4 பேர் கைது. 3 தனிப்படைகள் அமைத்து மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் தகவல். கொலை சம்பந்தமாக நஞ்சான் குளத்தை சேர்ந்த அழகர்சாமி அவரது மனைவி பேச்சியம்மாள் மகன் செந்தில்குமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அழகர்சாமியின் மகன்களான மணிகண்டன், சுந்தரபாண்டி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.