வாக்களிக்க மாஸ்க் கட்டாயம்- திருநெல்வேலி கலெக்டர்
வாக்குப்பதிவின் போது,வாக்காளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க வர வேண்டும் என திருநெல்வேலி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 6 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நெல்லையில் ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 60 லட்சம் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று வரை திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு 55 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுவரை தேர்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலின் போது பாதுகாப்பிற்காக 9 ஆயிரத்து 236 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார். நெல்லையில் கொரோனா பாதிப்பு அச்சப்படும் அளவில் இல்லை என்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என இதுவரை எந்த அறிவுறுத்தலும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என தெரிவித்தார். அதே வேளையில் வாக்காளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க வர வேண்டும் .திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு அளிக்க 3102 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.