மாட்டுத் தீவனத்துக்கிடையே மறைத்து வைக்கப்பட்ட மதுபாட்டில்கள்-லாரி,கார் பறிமுதல்
கர்நாடகா மாநில மதுபாட்டில்களை சட்டவிரோதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த லாரி மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கர்நாடகா மாநில மதுபாட்டில்களை சட்டவிரோதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையிலான தனிப்படையினர் குரும்பூர் மெயிரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த TN 58 AS 3174 எண்கொண்ட கண்டெய்னர் லாரி மற்றும் அதைத்தொடர்ந்து வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்ததில், லாரியில் 49 அட்டைப் பெட்டிகளில் 180 மில்லி அளவு கொண்ட 480 மதுபாட்டில்கள், அதே அளவு கொண்ட 1872 மதுபான பாக்கெட்டுகள் என மொத்தம் 2352 மதுக்குப்பிகள் (2352 × 180Ml = 423 லிட்டர்) மற்றும் ரொக்கம் ரூபாய் 14,51,850 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மதுபானங்களை கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், லாரி மற்றும் காரில் வந்த நபர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த சிவராமன் (40), திருப்பூர் படியூரைச் சேர்ந்த மெய்யழகன் (38) மற்றும் திருப்பூர் மன்னரை பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (35) ஆகியோரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் மொத்தமாக மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, அவற்றை கொண்டைக் கடலை மாட்டுதீவணங்களுக்கு இடையே மறைத்து தமிழ்நாட்டில் கும்பகோணம், புதுக்கோட்டை மாவட்டம், மதுரை, மேலூர் மற்றும் நாங்குநேரி உட்பட பல இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவிட்டு அதில் கிடைத்த பணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்பனை செய்ய நாங்குநேரியிலிருந்து வரும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24-ம்தேதி முதல் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 47 வழக்குகளில் 167 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவைகுண்டம் அருகே சாராய ஊறல் போட்டு வைத்ததாக 9 வழக்குகளில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்டதாக 57 வழக்குகளில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.