ஸ்டெர்லைட் ஆலை இயங்க எதிர்ப்பு : ஓருங்கிணைப்பு எதிர்ப்பாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பதாகைகளை கைகளில் ஏந்தி சுமார் 200க்கும் மேற்ப்பட்டோர் ஊர்வலமாக வந்து கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என ஓருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி - திருநெல்வேலி பி//ரதான சாலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதிகளில் அதிரடி போலீசார் வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், அலுவலக பிரதான வாயிலில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸார் தடுப்பு வேலிகளை அமைத்து 20 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதியளித்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, வழக்குரைஞர் ஹரி ராகவன், வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, காங்கரஸ் மாநகர தலைவர் முரளிதரன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் உட்பட 20 பேர் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜை சந்திந்து மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று மிகவும் குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையில் தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையிலிருந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்ட ஜூலை 31-ம் தேதியை கடந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க கூடாது.
முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து அரசு பணி கிடைக்காது விடுபட்டவர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கிட வேண்டும். போராட்டத்தில் படுகொலையுண்ட 15 தியாகிகளின் நினைவாக தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதில், மக்கள் அதிகாரம் செல்வக்குமார், நாம் தமிழர் பாக்கியராஜ், சுடலைமணி, அன்னலட்சுமி, எஸ்டிஎப்ஐ மைதீன் கனி, தங்கையா, தெர்மல் ராஜா, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்.