தூத்துக்குடியில் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண 3 நாள் சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வருகிற 22, 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தி பொங்கல் 2022க்குள்ளாக பொதுமக்களின் குறைகளை முழுமையாக களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளில், அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது நிலங்களுக்கான பட்டா தொடர்பான பிரச்சனைகளான கணினியில் புலஎண்கள் திருத்தம், உட்பிரிவு எண்கள் திருத்தம், பரப்பு திருத்தம், பட்டாதாரர்களின் பெயர்கள் மற்றும் தந்தை / பாதுகாவலர் பெயர்கள் திருத்தம், உறவுமுறை திருத்தம், பட்டாவில் சில குறிப்பு கலங்களில் காலியாக விடப்பட்டுள்ளமைக்கான திருத்தங்கள்,
பிற அருகாமையில் உள்ள பட்டாதாரர்களின் பெயர்கள் தங்களது பட்டாவில் இடம் பெற்றுள்ளமைக்கான திருத்தங்கள் போன்றவற்றுக்காகவும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த மனுக்கள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கோரல், ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்துதல், பல்வேறு வகையான சான்றுகள் கோரல், குடிநீர் வசதி, சாலை வசதி கோரல் போன்ற இனங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.