கல்லூரி களப்பயணம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 560 பேர் தேர்வு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் விதமாக நடைபெற்ற கல்லூரி களப் பயணத்தில் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றிபெறும் வகையில் நான் முதல்வன் என்ற திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ்,கல்லூரிக் களப் பயணம் என்ற நிகழ்ச்சி வாயிலாக, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட 560 மாணவர்கள் தங்களது பள்ளியின் அருகே அமைந்துள்ள 14 கல்லூரிகளுக்கு இன்று களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், ஒரு பகுதியாக, தூத்துக்குடி வஉசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், களப்பயணம் மேற்கொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துரையாடினார்.
அப்போது, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுக் கலைக் கல்லூரி, அரசு நிதி உதவி பெறும் தனியார் கலைக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மீன்வளக் கல்லூரி என மொத்தம் 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, 56 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 560 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்ட கல்லூரிக்கு அழைத்து சென்று உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைப்பட்டு உள்ளது.
பள்ளிப் பருவத்தில் ஒவ்வொரு மாணவர்களின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மிகவும் முக்கியமான தேர்வு பிளஸ் 2 வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு ஆகும். பொதுத் தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. தேர்வுக்கு செல்லும் கடைசி நிமிடம் வரை கடினமாக படித்து நல்ல மதிப்பெண் பெறும்பட்சத்தில் சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.
எப்பொழுதும் கடின உழைப்புதான் வெற்றி என்ற இலக்கை அடைய முடியும். எந்த ஒரு செயலாக இருந்தாலும், அதாவது, படிப்பாக இருக்கட்டும் விளையாட்டாக இருக்கட்டும் அதன்; இலக்கினை அடைய நீங்கள் 100 சதவிகிதம் உழைப்பை செலுத்த வேண்டும். முதல் முயற்சியில் தங்களது இலக்கினை அடையாவிட்டாலும், தொடர்ந்து தன்னம்பிக்கையோடு, விடாமுயிற்சியோடு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
அதுமட்டும்மல்லாமல், இங்கு வருகைதந்துள்ள அனைவருக்குமே எப்படியாவது அரசுப் பணியில் சேர்ந்துவிட வேண்டுமென்று எண்ணம் இருக்கும். ஆகையால், அரசின் சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராவதற்கு தங்களது கல்வித்தகுதியையும், தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக அவசியம்.
தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் செய்தித்தாள்களில் சமூகத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அன்றாட நடப்பு நிகழ்வுகள், கட்டுரைகள் மற்றும் போட்டித்தேர்வுகள் என பல்வேறு தகவல் இடம்பெற்று இருக்கு. நீங்கள் போட்டித்தேர்வுக்கு படிக்க உள்ளீர்கள் என்றால் செய்தித்தாள்களை தினந்தோறும் படித்தால் உங்கள் தேர்வுக்கும், உங்களின் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வயதோ, காலமோ அவசியமல்ல கடின உழைப்பே உங்களுக்கு வெற்றியைத்தரும். ஆகையால்,உங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும். எனவே, நடைபெறவுள்ள அரசுப்பொதுத்தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு, உதவி பேராசிரியர் சுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.