தூத்துக்குடியில் முழு ஊரடங்கு : சாலைகள் வெறிச்சோடின
தூத்துக்குடியில் முழு ஊரடங்கு காரணமாக, பரபரப்பாக இயங்கும் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது கட்ட பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கவும், நாளை (26-ந்தேதி) முதல் தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெரு நிறுவன கடைகள், டீக்கடைகள் முதலானவை இயங்க தடை விதித்தும் புதிய ஆணை பிறப்பித்துள்ளது. நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை சுமார் 30 மணி நேரம் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதிகள் , திருச்செந்தூர் மக்கள் அதிகம் கூடும் கோவில் வளாகம், கடற்கரை பகுதி,உட்பட விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பில் விரிவான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கை மக்கள் கடைபிடிப்பதற்காக மாவட்ட காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 2,000க்கும் மேற்ப்பட்ட போலீசார் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 60க்கும் மேற்பபட்ட இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மொபைல் ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கையொட்டி தூத்துக்குடியில் மருந்துக்கடைகள் பால் கடைகள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி நகரில் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் பழைய பேருந்து நிலைய சாலை, புதிய பேருந்து நிலைய சாலை, வி.இ.ரோடு, தமிழ் சாலை, உள்ளிட்டவைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முகூர்த்த நாளான இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்ட திருமணங்கள் கோவில்களிலும் திருமண மண்டபங்களிலும் குறைந்த அளவு மக்கள் கலந்துகொண்டு கொரனோ விதிமுறைகளை பின்பற்றி சனிடைசர் மற்றும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் முக்கிய சந்திப்புகளில் வாகன தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
அப்பொழுது தேவைகள் இன்றி சாலைகளில் இருச்சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அபராதமும் விதித்து வசூலித்தனர்.