கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
HIGHLIGHTS
![கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு](https://www.nativenews.in/h-upload/2021/10/24/1373550-img-20211024-wa0001.webp)
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அறிவானந்தம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த தனுஷ்கோடி மனைவி ஜெயசுதா (35) . இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணிபுரிந்து வந்தார். ஜெயசுதாவிற்கும் அதே ஊரில் வசித்துவரும் அய்யாவு மகன் மகேஸ்வரன் (30 ) என்பவருக்கும் இடையே இட பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ந் தேதி பிரச்சினை ஏற்பட்டபோது ஜெயசுதா, அதே ஊரில் வசித்து வரும் தனது பெரியப்பா மகன் அறிவானந்தம் (30) என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அறிவானந்தத்திற்கும் மகேஸ்வரனுக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அறிவானந்தம் தான் வைத்திருந்த கத்தியால் மகேஸ்வரனை குத்த முற்பட்டுள்ளார்.
அப்போது மகேஸ்வரனின் சித்தப்பா பாலு மகன் ராஜேஷ்கண்ணா (24) என்பவர் தடுக்க முற்பட்ட போது அவர் மீது கத்தி குத்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராஜேஷ்கண்ணா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறி வானந்தம் மற்றும் ஜெயசுதா இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையின் போது குற்றவாளி அறிவானந்தத்திற்கு ஆயுள் தண்டனையும், ஜெயசுதாவிற்கு 4 வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.இதனையடுத்து இனுவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.