பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார் அமைச்சர் சக்கரபாணி
திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொது மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் தேவைகளை அறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு கான தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், குடவாசல், நன்னிலம், திருவாரூர், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளருமான சக்கரபாணி நேரடியாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, வேளாண் கருவி உள்ளிட்ட தங்களின் தேவைகளை கோரிக்கை மனுவாக அளித்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்த சில நிமிடங்களிலேயே அதனை பரிசீலனை செய்து உடனடியாக தகுதி உடையவர்களுக்கு முதியோர் ஓய்வு தொகை, தோட்டக்கலைத்துறை மானியம், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.