மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: எம்எல்ஏ வழங்கல்
மருத்துவ படிப்புக்கு தேர்வான கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ கலைவாணன் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.
HIGHLIGHTS
2021 நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற, பழவநல்லூர் கிராமத்தை சேர்ந்த இரட்டையர்கள் பிரதாப் மற்றும் பிரதீப் சேலம் மற்றும் நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகி உள்ளனர்.
இந்த இரு மாணவர்களும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்று தங்க நாணயத்தை பரிசாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் இந்த இரு மாணவர்களின் சாதனையை பாராட்டி ரூ 50ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கினார். மேலும் அந்த இரு மாணவர்களுக்கும் மருத்துவர்கள் அணியும் மருத்துவ சீருடை மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து தங்கள் பள்ளியில் பயின்று முதல்முறையாக நீட் தேர்வில் தங்கள் பள்ளியின் சார்பில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் படிக்க உள்ள மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இணைந்து செல்போன் பரிசாக வழங்கினர். மாணவர்களின் நீட் தேர்வுக்கு ஊக்குவித்த தாவரவியல் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் இருவரும் தங்களுக்கு உதவிய ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர், பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கேசவன் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.