மண்ணெண்ணையுடன் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி
திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மண்ணெண்ணையுடன் வந்ததால் பரபரப்பு.
HIGHLIGHTS
திருவாரூர் மருதபட்டினம் பகுதியை சேர்ந்த காமாட்சி (32) என்ற மாற்றுத்திறனாளி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் (65) என்ற கணவரும், சீதளா தேவி (10),ஐயப்பன் (5) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வரும் காமாட்சி, வறுமை நிலை காரணமாக ஆறு மாதமாக வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை. அதனால், வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி வெளியே துரத்தியதால் வேறுவழியின்றி பேருந்து நிலையத்திலேயே வசித்துவருகிறார்.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் வேறு நபர் மூலம் காமாட்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என காமாட்சி தெரிவித்தார். தனக்கு தங்குவதற்கு இடம் ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார்.
அப்பொழுது அவரது கையில் மண்ணெண்ணையுடன் இருப்பதை கண்ட காவல்துறையினர் உடனடியாக அதை பறித்துச் சென்றனர் .இதனால் அவரின் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிம் கேட்டபோது அவருக்கான உதவிகள் உடனடியாக செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.