திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளை தெருவில் நடமாட விட்டால் அபராதம்
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கால்நடைகளை தெருவில் நடமாட விட்டால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்ப்போர், அவற்றை பொது இடங்களில் நடமாடவிடாமல் அவர்களது குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் பொது இடங்களிலும்,சாலைகளிலும் காணப்பட்டால் அவற்றைபிடித்து தங்கள் பொறுப்பில் ஓரிடத்தில் அடைத்து வைக்க நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கும் காவல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் உரிய அபராத தொகை செலுத்திய பின்பே கால்நடைகளை மீட்டுச்செல்ல இயலும்.
எனவே, திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் நடமாடவிடாமல், பொதுமக்களுக்கு கால்நடைகளால் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், தங்கள் குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த அறிவுரைகளை மீறி கால்நடைகளை பொது வெளியில் விடுபவர்கள் அபராததொகை செலுத்த நேரிடுவதோடு சட்டப்படியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.