தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்
தனியார் பள்ளிகள் அதிக கட்டண வசூலித்தால், பெற்றோர்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம்
HIGHLIGHTS
தனியார் பள்ளிகள் அதிக கட்டண வசூலித்தால், பெற்றோர்கள் தைரியமாக புகார் கொடுக்கவும். நிச்சயம் அப்பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 40 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்குப் புல் வெட்டும் இயந்திரங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் புற்களை அப்புறப்படுத்தி சீர் செய்வதற்கான கருவி முதன்மைக் கல்வி அலுவலர் முயற்சியால் 40 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க இதுவரை 1.27 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தப் பகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்து இருப்பதால், இங்கு உள்ள பள்ளிகள் அதிகப்படியான கட்டணம் வசூலிக்க வேண்டாம் என பள்ளிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளதாகவும், பெற்றோர்கள் யாரேனும் தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளித்தால், அந்த பள்ளிகள் மீது விசாரணை செய்யப்படும். நிச்சயமாக பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனவே பெற்றோர்கள் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் மு. சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.