வருகிற 13ஆம் தேதி கர்நாடக அரசை கண்டித்து போராட்டம்: காவிரி உரிமை மீட்புகுழு அறிவிப்பு
கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கர்நாடக முதல்வரை கண்டித்து வரும் 13ஆம் தேதி முதல்வரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு.
HIGHLIGHTS
தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் ஆரம்ப பணியை தொடங்கி விட்டதா என்பதை ஆய்வு செய்ய, தமிழக அரசு உண்மை கண்டறியும் குழு அனுப்ப வேண்டும். அவ்வாறு அணை கட்டுவதற்கான ஆரம்ப பணியை தொடங்கினாள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை கோர வேண்டும்.
மத்திய அரசு, கர்நாடக அரசிடம் இருந்து பெறப்பட்ட மேகதாட்டில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை திரும்பப் அளிக்க வேண்டும். கர்நாடக அரசு அணை கட்டும் பணியை நிறுத்தவில்லை என்றால் மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். கர்நாடக அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசு இனவிரோத போக்குடன் நடந்து கொள்கிறது இதுபோன்ற தமிழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் கர்நாடக அரசை கண்டிக்கும் வகையில் வருகிற 13-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை திருச்சியில் இருந்து கடலூர் வரை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.