பேருந்தில் திருநங்கைகளுக்கும் இலவசம்
தமிழக அரசு நகர பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம் என அறிவித்திருந்த நிலையில், திருநங்கைகளுக்கும் கட்டணம் வசூலிக்காததது மகிழ்ச்சி அளிப்பதாக திருநங்கைகள் நெகழ்ச்சி.
HIGHLIGHTS
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை அடுத்து முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்க கட்டணம் இல்லை என அறிவித்ததை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள 95 தஞ்சை நகர பேருந்துகள் மற்றும் 230 தஞ்சை மாவட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராமப்புறங்களில் இருந்து கடைகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு கட்டிட வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் தினமும் தங்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மிச்சமாகும் எனவும், பள்ளி கல்லூரி மாணவிகள் இந்த சலுகை மிக பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் நடத்துநர்கள் பெண்களுக்கு அளிக்கும் சலுகையை பேருந்துகளில் தங்களுக்கும் அளிப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் திருநங்கைகள் தங்களுக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் வரை மிச்சம் ஆவதாகவும், மேலும் தமிழக அரசு நிவாரண தொகை 4 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது.
திருநங்கைகள் பெரும்பாலானோருக்கு குடும்ப அட்டை இல்லாத நிலையில் திருநங்கை நலவாரியம் மூலம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணத்தொகை தங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.