தண்ணீரின்றி கருகும் பயிர்; குடம் கொண்டு ஊற்றி காப்பாற்றும் அவலம்
தஞ்சையில் தண்ணீர் இன்றி கருகும் குறுவை பயிரை, விவசாயிள் குடம் கொண்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றி வருகின்றனர்.
HIGHLIGHTS
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூ 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் 1.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது இலக்கை தாண்டி சாகுபடிகள் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் இன்னும் முழுமையாக வரவில்லை என விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் அடுத்த திருப்பந்துருத்தி பகுதியில் சுமார் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நாற்றுக்கு, 35 நாட்கள் ஆகியும், இதுவரை தண்ணீர் வராததால் நாற்றங்கால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கல்லணையிலிருந்து வெறும் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இப்பகுதியில் இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீர் திறந்து 40 நாட்களுக்கு மேலாகியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட வாய்க்காலில் வராததால், விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரின்றி காய்ந்து வருவதாகவும், ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை நம்பி, குறுவை சாகுபடியை தொடங்கினோம்.
ஆனால், தண்ணீர் வராததால் நாற்று நட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பயிரை காப்பாற்ற வாய்க்காலில் தேங்கியுள்ள மழை நீரை, குடம் கொண்டு ஊற்றி காப்பாற்ற முயற்சி செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பி,சி,டி போன்றவை கிளை வாய்க்கால்களை, முறையாக தூர்வாரததால், இப்பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனவும், ஆறு நிறைய தண்ணீர் சென்றும், எங்களுக்கு இதுவரை தண்ணீர் இல்லை. இனிமேல் காய்ந்த போன பயிரை காப்பாற்ற முடியாது என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.