தஞ்சை தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசன் ஆறுதல்
தஞ்சை தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர்ய. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் பாதுகாப்பு அளித்து பொதுமக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்துவது அரசினுடைய கடமை. அரசை யாரும் குற்றம் சாட்டவில்லை, பொதுமக்களின் நலன் கருதி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விபத்து நடைபெற்ற கோவில் வரவில்லை என்றாலும், மக்களின் நலன் கருதி அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.உயர்மின் அழுத்தக் கம்பி தாழ்வாக சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மின்சாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் வரகூரில் மின்சார கம்பி மீது பேருந்து உரசிய மின் விபத்தில் நான்கு நபர்கள் உயிரிழந்தனர். எனவே எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றார்.