திமுக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தஞ்சையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில், தஞ்சாவூரில் ரயில் நிலையம் முன்பு, இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு சட்டமன்றத் உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. ஆனால் அவர்கள் இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர். தொடர்ந்து மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. அ.தி.மு.கவை யாராலும், எந்த கொம்பனாலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. காய்கறிகளின் விலை ஏறி உள்ளது. இதற்கு தி.மு.க. அரசு உற்பத்தியைப் பெருக்காததும், பதுக்கலை தடுக்காதது தான் காரணம். அரசின் செயலால் மக்கள் அவதிப்படுகின்றனர். பெட்ரோல் ,டீசல் மீதான மாநில கலால் வரியை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.