குளத்தை ஆக்கிரமித்து தனியார் சொகுசு ரிசார்ட் ? கிராம மக்கள் எதிர்ப்பு
சுரண்டை அருகே குளத்து கன்மாய் நீர்பிடிப்பு பகுதியை தனியார் ரிசார்ட் ஆக்கிரமிப்பா? சர்வே செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள இரட்டை குளத்தை அடுத்த உசிலங்குளம் கண்மாய் (புலஎண்:484) கரை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் சொகுசு ரிசார்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாரியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017ல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என சர்வே செய்ய வருவாய்த் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ் கண்மாய் பகுதியை சர்வே செய்ய அறிவுறுத்தினார். ஆகவே வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், குறுவட்ட அளவர் ஆகியோர் நேரில் சென்று சுரண்டை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் ஒத்துழைப்புடன் நிலஅளவைப் பணி மேற்கொள்ள முற்பட்டனர்.
அப்போது மாரியப்பன் தலைமையில் துரைச்சாமிபுரம் ஊர் பொதுமக்கள் சுமார் 100 பேர் திரண்டு வந்து நீர்பிடிப்பு பகுதியில் சுவர் கட்டுவதால் நீர் சேமிக்கப்படாமல் நிலத்தடிநீர் மட்டம் குறையும். விவசாய பணிகள் பாதித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் .
எனவே தனியார் ரிசார்ட் நிர்வாகத்தினர் சுவர் கட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் சேமிக்க முடியாமல் தடுப்பதற்காக சர்வே செய்ய ஆட்சேபணை தெரிவித்து மறியல் செய்தனர். இதனால் சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் வேல்சாமி, சாரதி தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் தற்போது சர்வே செய்ய கூடாது என்றும், விரைவில் இப்பிரச்சனை தொடர்பாக தென்காசி கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள தீர்வுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.