40 ஆண்டுகளாக ஓடிய பஸ் இல்லை: கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் புகார்
40 ஆண்டுகளாக ஓடிய பஸ் இப்போது இல்லை என்று கலெக்டர் தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் புகார் கூறினார்.
HIGHLIGHTS
40 வருடங்களாக ஓடிய பஸ் தற்போது வரவில்லை என கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு ஊராட்சி தலைவர் குற்றம் சாட்டினார்.
தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாடியூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி மன்ற வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸ்நாபக அந்தோணி தலைமை வகித்தார்.இந்த கிராம சபை கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். கால்நடை துறை, பள்ளி கல்லி துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை உள்பட அனைத்து துறையை சார்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களை விளக்கி பேசினர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பேசும் பொழுது கடந்த 40 ஆண்டு காலமாக தென்காசியில் இருந்து தடம் எண் 13 என்ற பேருந்து எங்களது ஊருக்கு வந்து கொண்டிருந்தது. மேற்படி பஸ் போக்குவரத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்பெற்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த பேருந்து கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு தென்காசியில் சென்று கல்வி பயில வழியின்றி 15 மாணவிகள் கல்லூரி படிப்பு செல்ல முடியாமல் தற்போது பீடி சுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேருந்து டிப்போ மேலாளரிடம் கேட்டால் டயர் இன்றி பஸ் நிற்கிறது என்று கூறுகிறார். மேலும் அந்த பஸ் கீழப்பாவூர் தடத்தில் இயங்குவதை படம் பிடித்து காட்டினால் பஸ் இயக்க டிரைவர் இல்லை என பதில் அளிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் பல தடவை போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசினார் பலனில்லை. எனவே மேற்படி பஸ் எங்கள் ஊருக்கு மீண்டும் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் தற்போது பெண்களுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என்பதால் போதிய வருமானம் இன்றி இயங்குகிறது. எனவே மேற்படி இது போன்ற பேருந்துகளை நிறுத்தி இருக்கலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆலோசித்து வாய்ப்பு இருக்கும் சூழலில் பேருந்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.