கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 பேர் உயிரிழப்பு
குற்றாலம் தனியார் விடுதியில் மதுரையை சேர்ந்த தந்தை,மகள் விஷமருந்தி தற்கொலை, தாய் கவலைக்கிடமான நிலையில் அனுமதி
HIGHLIGHTS
குற்றாலம் தனியார் விடுதியில் விஷம் அருந்தி மதுரையை சேர்ந்த தந்தை,மகள் தற்கொலை, தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குற்றாலம் காவல்துறையினர் விசாரணை.
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி நுழைவு வாசல் எதிரே தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் கடந்த 30ம் தேதி இரவு மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்(55) தனது மனைவி காமாட்சி மகள் தன பிரியா உடன் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் விடுதி உரிமையாளர் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது தந்தை மகாலிங்கம் மகள் தன பிரியா கட்டிலில் இறந்து கிடந்த நிலையில் தாய் காமாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.இதனைதொடர்ந்து குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காமாட்சியை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தென்காசி தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இருவரின் உடலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், கடந்த 4மாதங்க ளுக்கு முன்னர் மகாலிங்கம் மகனும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றாலம் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு வரும் நிலையில் தந்தை,மகள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.