தென்காசியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தென்காசி மாவட்டத்தில், தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜன 31 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 886 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும் ரயில் நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் 3,538 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் அடங்குவார்கள். எனவே நாளை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்குமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.