இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கடல் அட்டைகள் பறிமுதல்
இராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட 2 டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் முத்துராமசிங்க நகர் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த இருப்பதாக இராமேஸ்வரம் சிறப்பு குற்ற பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், அங்கு சோதனை செய்ததில் சுமார் 2 டன் எடை கொண்ட கடல் அட்டைகள் அந்த காட்டு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டி இருப்பதை பார்த்தனர்.
போலீசார் வருவதை அறிந்து தோட்டத்தில் இருந்தவர்கள் தப்பி சென்றனர். பறிமுதல் செய்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் உயிர் கடல் அட்டைகளை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடல் அட்டைகளை பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், சுண்ணாம்பு கட்டிகள், நான்கு சக்கர சரக்கு வாகனம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோப்பில் இருந்து தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.