பாம்பன் விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு.மீனவர்கள் அச்சம்
பாம்பன் விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு. பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை.
HIGHLIGHTS
ராமேஷ்வரம்:
பாம்பன் விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பாம்பனில் இருந்து நேற்று காலை 100க்கும் அதிகமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்வோம் என ஒலிபெருக்கி மூலமாக பாம்பன் மீனவர்களை எச்சரித்துள்ளனர். இதனை அடுத்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், பாம்பனை சேர்ந்த லிம்பர்ட் மற்றும் காலின்ஸ், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிருபை ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகள் மீது இலங்கை கடற்படையினர் திடீரென்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், மூன்று விசைப்படகுகள் மீன் பிடித்து கொண்டிருந்த 20க்கும் அதிகமான மீனவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மீன்பிடிக்காமல் பாதியிலேயே பாம்பன் வந்தனர். இதனால் மீனவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கபட்ட விசைப்படகு உரிமையாளர் லிம்பர்ட்டிடம் ராமேஸ்வரம் மீன் வளத்துறை மீன்வளத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் பிடி தடைகாலம் முடிந்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மூன்று முறை கடலுக்கு சென்றனர். மூன்று முறையும் இலங்கை கடற்படை பாம்பன் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது நடத்திய துப்பாக்கி சூட்டால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.