கஞ்சா போதையில் நண்பர்கள் வெறிச்செயல்: உடன் பழகிய நண்பனை அடித்துக் கொலை
10 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞனின் உடல் சடலமாக தோண்டி எடுப்பு. கஞ்சா போதையில் உடன் பழகிய நண்பர்களே அடித்து கொலை.
HIGHLIGHTS
10 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞனின் உடல் சடலமாக தோண்டி எடுப்பு. கஞ்சா போதையில் உடன் பழகிய நண்பர்களே அடித்து கொலை.
இராமேஸ்வரம் சின்னம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் மணிராஜ். இவர் வட மாநிலத்தில் வேலை செய்து வருவதால் அவரது மனைவி உஷாவுடன் வட மாநிலத்தில் தங்கியுள்ளார். இதனால் இவரது மகன் கணேஷ் ராஜ் (19) ராமேஸ்வரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். 19 வயதான இளைஞர் கணேஷ் ராஜ் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கணேஷ் ராஜ் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ந் தேதி மதியம் நண்பர்களுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். இரவு வரை வீடு திரும்பாததால் கணேஷ் ராஜ் தாத்தா, தந்தை மணிராஜுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து மணிராஜ் இராமேஸ்வரம் வந்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மணிராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இராமேஸ்வரம் போலீசார் கணேஷ் ராஜ் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணேஷ்ராஜ் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் புகார் நிலுவையில் இருந்து வந்தது.
கடந்த வாரம் வேறு ஒரு வழக்கில் இராமேஸ்வரத்தை சேர்ந்த இளைஞர் சேரன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். முன் விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் இணைந்து கணேஷ்ராஜ் என்பவரை கஞ்சா போதையில் கொலை செய்து புதைத்ததாக சேரன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மைக்கேல்அஜித் என்பவரை போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராரில் கணேஷ்ராஜை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்களுடன் சதீஷ் என்ற இளைஞர் உட்பட மூன்று பேரும் கணேஷ்ராஜை மது குடிக்க செல்வது போல் அழைத்து சென்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அடுத்துள்ள செம்மமடத்தில் உள்ள பனைமர காட்டு பகுதியில் வைத்து அடித்து கணேஷ்ராஜை கொலை செய்து அங்குள்ள மணலில் புதைத்தாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு எஞ்சியுள்ள சதீஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கணேஷ்ராஜ் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து இன்று இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு இளைஞரின் உடலை தோண்டி எடுத்தனர். தோண்டி எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மற்றும் எலும்பு மரபணு சோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கணேஷ் ராஜ் புதைக்கப்பட்ட இடத்தில் வைத்து எவ்வாறு கொலை செய்யப்பட்டது என விசாரணை நடத்தினார். கஞ்சா போதையில் உடன் பழகிய நண்பனை அடித்து கொலை செய்து மணலில் புதைக்கபட்ட சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.