உலக தண்ணீர் தினம்: தூய்மை குடிநீர் அவசியம் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்
குடிதண்ணீரானது 13 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது என்றார் ஆட்சியர் கவிதாராமு
HIGHLIGHTS
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி குடிநீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய களபரிசோதனை பெட்டியின் மூலம் எளிய பரிசோதனை செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப உலகின் அனைத்திற்கும் ஆதாரமாக நீர் விளங்கி வருகிறது. அதன்படி நீரின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் நாள் உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன் நோக்கம் தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.
அதன்படி இன்றையதினம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம், குடிநீர் சுகாதாரம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக தண்ணீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட அறந்தாங்கி வட்டாரத்தில் பெரியாளுர், வேம்பங்குடி கிராம ஊராட்சிகளிலும், அரிமளம் வட்டாரத்தில் கே.ராயவரம், திருவாக்குடி கிராம ஊராட்சிகளிலும், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் பிசானத்தூர், துருசுப்பபட்டி கிராம ஊராட்சிகளிலும், குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் வாழமங்களம் கிராம ஊராட்சியிலும் மற்றும் விராலிமலை வட்டாரத்தில் களமாவூர் கிராம ஊராட்சி ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் குடிநீர் தரம் குறித்து களபரிசோதனை பெட்டி வழங்கப்பட்டு பரிசோதனை செய்வது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 13 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீரின் தரம் உறுதி செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமான நீரினை பருகி ஆரோக்கியமான உடல்நலத்தை பேண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் அயினான், சிவப்பிரகாசம், .உதவி நிர்வாகப் பொறியாளர் இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.