காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை தடை செய்ய விடமாட்டோம்: அமைச்சர் ரகுபதி
இத்திட்டம் திமுக தலைவர் கருணாநிதியின் கனவுத் திட்டமாகும் ஆகவே நிச்சயமாக இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவோம்
HIGHLIGHTS
கலைஞரின் கனவுத் திட்டமான காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை தடை செய்வதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்புத் துறை ஆகியவை இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாமை புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடத்தியது. இதில் தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை நேரடியாக தேர்ந்தெடுத்தனர் . இம்முகாம் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேவை வாய்ப்புப் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: காவிரி வைகை குண்டாறு திட்டம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய கருத்துகளை எடுத்து வைத்து திட்டத்தை செயல்படுத்த என்னென்ன அனுமதிகளைப் பெற முடியுமோ அதை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்து அனுமதி பெறுவோம்.இந்த திட்டத்தை தடை செய்ய விடமாட்டோம்.
இத்திட்டம் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கனவுத் திட்டமாகும் ஆகவே நிச்சயமாக இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவோம்.காவிரி குண்டாறு திட்டம் தொடர்பாக ஏற்கெனவே எந்தெந்த பகுதியில் நிலம் எடுத்து இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் புதிதாக நிலம் எடுக்கும் பணி நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை உருவாக்க வேண்டும் என்பது திமுகாவின் நீண்ட நாள் கோரிக்கை. அதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்பில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று நேற்று முதல்வர் அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் தமிழகத்தில் வேறு மாநிலத்தவர்கள் வேலைவாய்ப்பில் சேர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது .
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம். இதை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தத் திட்டம் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கனவுத் திட்டம் என்றும் அதை கண்டிப்பாக தமிழக அரசு நிறைவேற்றும் என்றும் புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கூறியது மாவட்ட விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.