நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் ரத்து செய்ய முடியாது: ஹெச்.ராஜா
நீட் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்த தமிழக அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்
HIGHLIGHTS
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றார் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: வாராணசி பல்கலைகழகத்தில் மகாகவி பாரதியாருக்கு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி தான் உண்மையான தமிழகத் தலைவர் தேசிய தலைவர். ஒரு மொழியை வளர்க்கும் விதம் பிற மொழியை திட்டுவது வெறுப்பு உணர்வை உருவாக்குவது என்பது தமிழ் பற்று அல்ல. உண்மையான தமிழ் பற்றாளர் பிரதமர் தான்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது தமிழ்மொழியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய ஆளுநர் நியமனத்தை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி வரவேற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக, கல்லூரியில் நடைபெற்ற ஊழல் வழக்கு உள்ளது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் தான் உள்ளார். ஆகவே பயம் காரணமாகவே அவர் ஆளுநர் நியமனத்துக்கு எதிராக கருத்து கூறுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேசப்பிரிவினையை ஊக்குவிப்பவர் என்பதால்தான் அவரும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இருவரது விமர்சனங்களும் அரசியல் நாகரீகம் இல்லாதவை. ஆளுநரை நியமனம் செய்வது மத்திய அரசின் உரிமை. நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் போடுவது பிரிவினைவாதச் செயல். நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானமும் அதைப்போன்ற செயல்தான். இதைத் தவிர்க்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன்.
சேலத்தில் ஒரு மாணவன் உயிரிழப்பு என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இதனால் தான் பாரதப்பிரதமர் மாணவர்களுக்கு அடிக்கடி ஆலோசனை வழங்கி வருகிறார் தேர்வுகளை கண்டு பயம் கொள்ளக்கூடாது என்று மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, மாணவர்களை தயார் படுத்துவதற்காகத்தான் விலக்கு கேட்டார். நீட் வேண்டாம் என்று கூறவில்லை. நீட் தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்த தமிழக அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது மாணவர்களின் தலையின் கீழ் கத்தியை தொங்க விடாதீர்கள்.
திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் கூறிய, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு உள்ளது. இது அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார் அவ்வாறு கல்லூரி தொடங்கினால் எந்தத் துறையின் கீழ் கல்லூரி செயல்படும். அறநிலையத்துறையா அல்லது கல்வித்துறையா யார் பொறுப்பு அதிகாரியாக இருப்பார்கள். ஏற்கெனவே உயர்நீதிமன்ற தீர்ப்புபடி, இந்து சமய அறநிலைத்துறை நிதியின் கீழ் கல்லூரி செயல்பட்டால் தேவாரமும் திருவாசகமும் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது இதனை அரசு நிறைவேற்றுமா.
அமைச்சர் சேகர் பாபு அறநிலையத்துறை சட்டத்தை மதிக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் அவருக்கு இரண்டொரு நாளில் கடிதம் எழுதப் போகிறேன். கொடநாடு விவகாரத்தில் அரசியல் செய்தால், நான்கரை ஆண்டுகளில் மக்கள் உங்களை மாற்றி விடுவார்கள் என்றார் ஹெச்.ராஜா.