பேருந்து நிலையம் அருகே மழை நீரை வெளியேற்றும் பணி: எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு
புதுக்கோட்டை நகரிலுள்ள அனைத்து குளங்களும் நிரம்பி குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமக்குள்ளாயினர்
HIGHLIGHTS
பேருந்து நிலையம் அருகே மழை நீரை வெளியேற்றும் பணியை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு மணி நேரம் வெளுத்து வாங்கிய பலத்த மழையினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
புதுக்கோட்டை மாவட்டமே தண்ணீரில் மிதந்தது. குறிப்பாக, புதுக்கோட்டை நகர பகுதிகளில் அனைத்து குளங்களும் நிரம்பி சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமக்குள்ளாயினர். தகவல் அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, உடனடியாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை இரவு பகல் பாராமல் நேரடியாகச் சென்று பார்வையிட்டு, மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டார். அதன் பயனாக புதுக்கோட்டை நகர பகுதிகளில் தற்போது பல்வேறு இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் கழிவுகளால் அடைபட்டதால், மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து. நேற்று இரவில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மழைநீரை அகற்ற எம்எல்ஏ முத்துராஜா உத்தரவிட்டார். இன்று காலை சாக்கடை அடைப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி மழை நீரை வெளியேற்றும் பணியை நேரடியாக சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.