மாநில இளையோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு
மாநில இளையோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பெரம்பலூர் வீராங்கனைகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பாராட்டு தெரிவித்தார்.
HIGHLIGHTS
35வது மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் என்.பி.ஆர் கல்வி நிறுவன விளையாட்டு மைதானத்தில் 8.12.2021 முதல் 11.12.2021 வரை நடைபெற்றது. இப்போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 18வயதிற்குட்பட்ட பிரிவில் எம்.தன்யா ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் 400மீ தடை தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 20 வயதிற்குட்பட்ட பிரிவில் ஆர்.சங்கீதா ஹெப்டாத்லான் போட்டியில் வெண்கலப்பதக்கமும் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும், ஆர்.கிருத்திகா 800மீ ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கமும் மற்றும் 400மீ ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கமும், வீ.பிரியதர்ஷினி ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் என மொத்தம் 7 பதக்கங்கள் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளையும், தடகள பயிற்சியாளர் க.கோகிலா ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் சி.ராஜேந்திரன் மற்றம் விளையாட்டு விடுதி மேலாளர் ஆர்.ஜெயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.