தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
HIGHLIGHTS
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பெரம்பலூரில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக திருச்சி சரக போலீஸ் டி.ஜ.ஜி. அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இதையடுத்து டி.ஜ.ஜி.சரவணசுந்தர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் இரவு பெரம்பலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் தெப்பகுளம் அருகே சின்ன தெற்கு தெருவை சேர்ந்த மருதமணி என்கிற மாது (வயது 36), முத்து நகரை சேர்ந்த வடிவேல்(54), திருநகரை சேர்ந்த தண்ணீத்தொட்டி சுரேஷ்(37), வடக்கு மாதவி சமத்துவபுரத்தை சேர்ந்த முனியாண்டி மகன் ரவிக்குமார்(31), இந்திரா நகரை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் கலை என்கிற சிவா(29) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் மருதமணி தி.மு.க. கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மாணவரணியின் துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் 5 பேரை கைது செய்து பெரம்பலூா் கிளை சிறையில் இன்று அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ. ஆயிரத்து 880 மற்றும் ஒரு கார், மொபட், 7 செல்போன்கள், 3 ஹார்டு டிஸ்க்கள், 3 மெமரி கார்டுகள், 2 பென்டிரைவ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.