இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை: பெரம்பலூர் ஆட்சியர் தகவல்
இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக்கல்விச்சட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் தகுதியான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்ட தகவல்:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட(2009)த்தின்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பில் மொத்தமுள்ள சேர்க்கைக்கான 25% இடங்களுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் 05.07.2021 முதல் 03.08.2021 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலகம், பெரம்பலூர் மற்றும் வேப்பூர் (இ) பேரளி அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம், வட்டார வள மையங்கள் (BRC) ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தில் சேர்க்க விரும்பும் பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம். எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பில் பள்ளியில் சேர்வதற்கு 1 கி.மீ. சுற்றளவில் வசிக்கவேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர் மூன்றாம் பாலினத்தவர் துப்புரவு தொழிலாளியின் குழந்தை மாற்றுதிறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
இணையதளவழியில் விண்ணப்பிக்க வரும்போது பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் நலிவடைந்த பிரிவனருக்கானச் சான்று, மாற்றத்திறனாளிச் சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்