லாட்ஜில் விஷமருந்திய ஜோடி, பெண் உயிரிழப்பு
பெரம்பலூரில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த ஆண் பெண் இருவரும் விஷம் அருந்தியதில் பெண் உயிரிழந்தார்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சென்னையை சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் துறையூர் அருகே உள்ள ஏரக்குடி கிராமத்தை சேர்ந்த பூங்கொடி ஆகிய இருவரும் கடந்த 17ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அறைக்குள் சென்று உட்புறம் தாழிட்டவர்கள் இன்று காலை அறையை திறக்காத நிலையில், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையை சோதனை செய்த போது இருவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பூங்கொடி உயிரிழந்துள்ளதும் மகேந்திர குமார் மயக்க நிலையில் இருப்பதும் தெரிய வரவே மயக்க நிலையில் உள்ள அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.