இரு சக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்டது. இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செந்தில். இவர் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலின் அருகே உள்ள தனியார் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கடையின் எதிரே உள்ள பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடையில் பணியாற்றிய செந்தில், பணி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்து பார்த்த போது தனது இருச்சக்கர வாகனத்தை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து செந்தில் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அவ்வழியாக வந்த ஒருவர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி செல்வது தெரியவந்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் திருட்டில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.