வேலாக்குறிச்சி ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தி.க. எதிர்ப்பு
வேலாக்குறிச்சி ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தி.க. வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகலூரில் வேலாக்குறிச்சி ஆதீனத்தின் 60 - ஆவது திருமண நாளை (மணிவிழா) முன்னிட்டு ஆதீனமும் அவரது மனைவியும் பல்லக்கில் பட்டின பிரவேசம் மேற்கொள்ளும் நிகழ்வு இன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மனிதனை சக மனிதனே சுமந்து செல்லும் இந்த பல்லக்கு தூக்கி செல்லும், பட்டின பிரவேச நிகழ்விற்கு நாகை மாவட்ட திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வேலாக்குறிச்சி ஆதீனத்திடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்த, பட்டினபிரவேசம் நடைபெறும் நேரத்தில் மறியல் போராட்டம் நடத்த திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் புபேஷ் குப்தா அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பல்லக்கு தூக்கி செல்லும் நிகழ்ச்சியை ஆதீனம் நிறுத்தி விட்டதாகவும் மற்ற சடங்குகள் நடத்த இருப்பதாகவும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்த வந்த திராவிட கழகத்தினர் கோவில் நிர்வாகம் மற்றும் ஆதீனத்திற்கு நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினர் அங்கு திரண்டு காணப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் காணப்பட்டது.