மாட்டு கொட்டகையாக மாறிய மகளிர் சுகாதார வளாகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டியில், மகளிர் சுகாதார வளாகம் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அது மாட்டு கொட்டகையாக மாறி பயன்பாடின்றி உள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி– ராயக்கோட்டை சாலையில், வெலஹலஹள்ளி செல்லும் வழியில் உள்ள ஆலப்பட்டி காலனியில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம், 2004ல் கட்டப்பட்டது. அங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்கு, குளியலறை, கழிப்பறை மற்றும் துணி துவைக்கும் திண்டுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் அங்கு அமைக்கப்பட்ட போர்வெல்லில் இருந்த மோட்டாரை பழுது பார்ப்பதாக கூறி பஞ்சாயத்து நிர்வாகத்தினர், சிறிது நாட்களிலேயே எடுத்து சென்றுள்ளனர். அதன் பிறகு திரும்பவும் அதனை பொருத்தாதலால், சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் இருந்து வருகிறது.
இதனால், இப்பகுதி மக்கள் தங்களது மாடுகளை அங்கு கட்டி வைத்து வருகின்றனர். குளியலறை மற்றும் துணி துவைக்கும் இடங்களில் வைக்கோல் போரை போட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம் வீணடிக்கப்பட்டு வருகிறது.
மோட்டாரை பழுதுக்கு எடுத்து சென்றவர்கள் திரும்ப வைக்கவில்லை. நீர் இருந்தும் மோட்டார் இல்லாததால் தண்ணீர் இல்லை. கடந்த 2011ல் இது புனரமைக்கப்பட்டது போல், கணக்கு காட்டி மேலும் பல லட்சம் செலவிட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக கூறினார்.